செய்திகள்

பொள்ளாச்சி அருகே விபத்து- சுற்றுலா வந்த மினி பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி

Published On 2018-11-12 11:24 GMT   |   Update On 2018-11-12 11:24 GMT
பொள்ளாச்சி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் கேரள எல்.ஐ.சி. முகவர் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 28 பேர் கடந்த 9-ந் தேதி மினி பஸ்சில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்று பார்த்தனர்.

நேற்று இரவு பொள்ளாச்சி வழியாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இந்த மினி பஸ் நள்ளிரவு 11.15 மணியளவில் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென பஸ்சின் வலது முன் பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோடு ஓரம் தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த எர்ணாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராஜ் (38) சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இவர் எல்.ஐ.சி. முகவர் ஆவார்.

பஸ்டிரைவர் நோபி, நந்துலால் (19) யாது (18), அஜீஸ் (20), அரவிந்த் சியாம்பிரகாஷ் (26), விஷால் (24), அகில் விஸ்வநாத் (26), அம்ருத் (22), சாஜேஸ் (37), விநாயக் (26), ஜித்து26), விஷ்ணு, விமல், கிரிஷ் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 14 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து எர்ணாகுளத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பொள்ளாச்சி விரைந்து வந்தனர்.

விபத்து தொடர்பாக ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News