செய்திகள்

போளூரில் அரசு பஸ் மோதி தாய்-மகன் பலி

Published On 2018-11-08 17:47 GMT   |   Update On 2018-11-08 17:47 GMT
போளூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தாய், மகன் பரிதாபமாக இறந்தனர்.
போளூர்:

போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 47), விவசாயி. இவரது மனைவி ஆண்டாள் (40). இவர்களது மகன் தமிழரசன் (19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராந்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். கடந்த 5-ந் தேதி தீபாவளிக்காக ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க தமிழரசனும், ஆண்டாளும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது போளூரில் இருந்து மன்சூராபாத் செல்லும் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தமிழரசன் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உரியிழந்தார். மேலும் தூக்கி வீசப்பட்டதில் ஆண்டாளும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசன் மற்றும் ஆண்டாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் பெரணம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News