செய்திகள்

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக கோவை, திருப்பூரில் 336 பேர் மீது வழக்கு

Published On 2018-11-07 10:07 GMT   |   Update On 2018-11-07 10:07 GMT
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் 336 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை:

கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை மாநகரில் மத்திய சரகத்தில் 44, கிழக்கு சரகத்தில் 27, மேற்கு சரகத்தில் 32, தெற்கு சரகத்தில் 22 என மொத்தம் 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 29 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (அரசு அதிகாரிகள் உத்தரவை மீறுதல்), 285 (எளிதில் தீப்பற்றும் பொருட்களை கையாளுதல்) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம் சரகத்தில் 14 பேர், பேரூர் சரகத்தில் 10, கருமத்தம்பட்டி சரகத்தில் 8, பொள்ளாச்சி சரகத்தில் 12, வால்பாறை சரகத்தில் 15 என மொத்தம் 59 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல திருப்பூர் மாநகரில் தெற்கு சரகத்தில் 47, வடக்கு சரகத்தில் 73 பேர், புறநகர் பகுதிகளில் 32 பேர் என மொத்தம் 152 பேர் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். #tamilnews
Tags:    

Similar News