கள்ளக்காதலனை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்து தலைமறைவான பெண் 5 ஆண்டுக்கு பிறகு கைது
கும்மிடிப்பூண்டி:
கேரளா மாநிலம் எர்ணாக்குளம் அடுத்த களம்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 45). இவர் முதல் கணவனை விட்டு விட்டு அதே பகுதியைச்சேர்ந்த ஏற்கனவே திருமணமான கார்த்திகேயன்(51) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார்.
பின்னர் அவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான்குப்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.
இந்த நிலையில், கள்ளக்காதலி மணிமேகலையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் தகராறில் ஈடுபட்டார். 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி ஏற்பட்ட மோதலின் போது மணிமேகலை, கத்தியால் குத்தி கள்ளக்காதலன் கார்த்திகேயனை கொலை செய்தார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து மணிமேகலையை கைது செய்தனர். 2013-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த மணிமேகலை, தலைமறைவாகி விட்டார். அவர் கேரளா சென்று தனது முதல் கணவருடன் வசித்து வந்தது தெரிந்தது. இதற்கிடையே மணிமேகலையை கைது செய்ய திருவள்ளூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.
கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் பரிபூரணம் சப்-இன்ஸ் பெக்டர்கள் சபாபதி, சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கேரளா சென்று கடந்த 5 வருடங்களாக தலை மறைவாக இருந்து வந்த மணிமேகலையை கைது செய்தனர். பின்னர் அவரை கும்மிடிப் பூண்டிக்கு அழைத்து வந்தனர்.