செய்திகள்

ஆலங்குடியில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-10-31 14:50 GMT   |   Update On 2018-10-31 14:50 GMT
ஆலங்குடியில் சீரான குடிநீர் வழங்ககோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி:

ஆலங்குடி வன்னியன் விடுதி அருகே வன்னியன் விடுதிதெரு, தொண்டைமான் குடியிருப்பு, மற்றும் காட்டுப்பகுதியில் 3 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இவைகளிலிருந்து பொது குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டைமான் குடியிருப்பில் உள்ள மின் மாற்றி பழுதானது. இதனால் மின்சாரம் இல்லாமல கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வன்னியன் விடுதி பொதுமக்கள் மின்சாரடிரான்ஸ் பார்மரை பழுது நீக்கி தராமல் புதிய மின்டிரான்ஸ் பார்மர்களை அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆலங்குடி- அறந் தாங்கி சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்திய நாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன்,மற்றும் ஆலங் குடி மேற்கு மின் வாரிய பொறியாளர் ஞானசேகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

2 நாட்களில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News