செய்திகள்

திட்டக்குடி அருகே குடிபோதையில் டிரைவரை தாக்கி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- வாலிபர் கைது

Published On 2018-10-31 11:50 GMT   |   Update On 2018-10-31 11:50 GMT
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குடிபோதையில் டிரைவரை தாக்கி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து நாவலூருக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை ஏ.அகரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக சின்னத்துரை பணியில் இருந்தார்.

அந்த பஸ் நாவலூர் கிராமத்துக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் திட்டக்குடிக்கு மீண்டும் புறப்பட்டது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆவினங்குடியை அடுத்த கொட்டாரம் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (28) என்பவர் அந்த பஸ்சை திடீரென்று வழிமறித்தார். பின்னர் அவர் பஸ்சின் டிரைவரிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தார்.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். உடனே சக்திவேல் தன்னிடம் இருந்த பேனா கத்தியை காட்டி மிரட்டினார். பின்பு அவர் கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பஸ் கண்டக்டர் சின்னத்துரை ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து சக்திவேலை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் குடிபோதையில் டிரைவரிடம் தகராறு செய்து, பஸ்சின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News