போளூரில் மனைவியை கொன்ற வாலிபர் கைது
போளூர்:
போளூர் பொத்தரையை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் பச்சையப்பன் (வயது 25). கட்டுமான தொழிலாளி. இவருக்கும், கலசப்பாக்கம் நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் பூஜா என்கிற தரணிக்கும் (21), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில், பச்சையப்பனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுதொடர்பான தகராறில், நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி பூஜாவை பச்சையப்பன் அடித்துக் கொன்றார்.
இதையடுத்து, அவர் தப்பி ஓடிவிட்டார். போளூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பச்சையப்பனை தீவிரமாக தேடினர். நேற்றிரவு அவர் பிடிபட்டார்.
பச்சையப்பனை கைது செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால், போலீசாரின் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. வாய்திறக்காமல் அமைதியாக இருந்தார்.
எனினும், போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பூஜாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.