செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்

Published On 2018-10-27 23:06 IST   |   Update On 2018-10-27 23:06:00 IST
மாரப்பநாயக்கன்பட்டியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தர விட்டார்.

அப்போது அவர் பேசுகையில், தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் மழைநீர் தேங்காத வண்ணம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்குவதால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களை ஏற்படுத்தும் ஏ.டி.சி. வகை கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்பட காரணமாகிறது. டெங்கு காய்ச்சல் கொசு கடிப்பதனாலும், பன்றிக்காய்ச்சல் சளி, தும்பல், இருமல், எச்சில் மூலம் பரவுகிறது. அதனால் பொதுமக்கள் தும்பும்போது கைகுட்டை வைத்து அருகில் உள்ளவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த முகாமில் 150 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 35 ஆயிரத்து 64 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார். இதில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சந்தியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தாட்கோ மேலாளர் மீனாட்சிசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், ராமசந்திரன், தனிதாசில்தார் மோகனசுந்தரம், ஊராட்சி செயலர் செந்தில் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் தாசில்தார் கோபிநாத் கூறினார்.
Tags:    

Similar News