ராமநாதபுரம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரக்குடி மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வன்னியாத்தாள் (வயது 75).
இவர் நேற்று மாலை விவசாய வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வன்னி கருப்பணசாமி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வன்னியாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து வன்னியாத்தாள் சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பரமக்குடி அருகே உள்ள கஞ்சியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (வயது 40). நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். இரவு வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த 3¼ பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். பரமக்குடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.