செய்திகள்

வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை- மர்ம மனிதர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2018-10-26 17:52 GMT   |   Update On 2018-10-26 17:52 GMT
கடலூரில் வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:

கடலூரை அடுத்த பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 55). வியாபாரி. இவர் தனது வீட்டின் ஒரு அறையில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் பெரியக்காரைக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு செல்ல சிவாஜி முடிவு செய்தார்.

அதன்படி வீடு மற்றும் கடையை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் சிவாஜியின் வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு வீட்டை மீண்டும் பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

இந்த நிலையில் சிவாஜி வீட்டுக்கு வந்தார். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை மற்றும் எல்.இ.டி. டி.வியை கொள்ளையடித்து சென்றது அவருக்கு தெரிந்தது.

இது குறித்து முதுநகர் போலீசில் சிவாஜி புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News