செய்திகள்

அறச்சலூர் அருகே பேராசிரியர் மனைவி விபத்தில் பலி

Published On 2018-10-25 18:16 GMT   |   Update On 2018-10-25 18:16 GMT
அறச்சலூர் அருகே பேராசிரியர் மனைவி விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
அறச்சலூர்:

அறச்சலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (27). இவர்களுக்கு திபித் என்ற 4 வயது மகன் உள்ளான். இவன் கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். நேற்று காலை சுரேஷ்குமாரின் தந்தையான ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய பேரனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார்.

அப்போது அவருடன் கலைவாணியும் சென்றார். பின்னர் சிறுவன் திபித்தை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு மீண்டும் அவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது அறச்சலூர் அருகே உள்ள கொடுமுடி கைகாட்டி பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அந்த சரக்கு வேன் மீது மோதாமல் இருக்க ஈஸ்வரமூர்த்தி பிரேக் போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் கலைவாணி மீது மோதியதோடு, அவரின் தலையின் மீது சரக்கு வேனின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

இதனால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஈஸ்வரமூர்த்தி காயத்துடன் உயிர்தப்பினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News