சீர்காழி அருகே குளத்தில் மிதந்த வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஒரு வாலிபர் பிணம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி புதுப்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குளத்தில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர் , சீர்காழி அடுத்த திருநீலகண்டம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் ராஜசேகர் (வயது 20). என தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜசேகர் உடலை பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வாலிபர் ராஜசேகர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஓதவந்தான்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாராயம் குடித்து விட்டு குளத்தில் குளிக்கும் போது அவர் இறந்து இருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் உடல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜசேகரின் சாவுக்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.