செய்திகள்

ராமேசுவரத்தில் நகராட்சி டிரைவர் தற்கொலை- அதிகாரிகள் கண்டிப்பால் விபரீதம்

Published On 2018-10-25 11:06 GMT   |   Update On 2018-10-25 11:06 GMT
ராமேசுவரத்தில் அதிகாரிகள் கண்டித்ததால் நகராட்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் துளசிபாவா மடத் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56). நகராட்சி அலுவலகத்தில் குப்பை லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு நாகராஜ் குடும்பத்தினருடன் வீட்டில் படுத்திருந்தார். காலையில் அவரை காணாததால் குடும்பத்தினர் தேடினர்.

அப்போது வீட்டின் ஒரு அறையில் நாகராஜ், தூக்கில் தொங்குவது தெரியவந்தது. அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது நாகராஜ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது நாகராஜ் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. இதில் உயர் அதிகாரிகள் கண்டிப்பு காரணமாக தற்கொலை முடிவை எடுத்ததாக நாகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News