தக்கலை அருகே ஆசிரியரை தாக்கிய வாலிபர் கைது
தக்கலை:
தக்கலை அருகே திருவிதாங்கோடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம் (வயது 55). கடந்த ஜூன் மாதம் பள்ளிக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அலுவலக அறையை உடைத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை தீவைத்தது. இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஒரு கும்பல் ஜூலை மாதம் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் செல்வத்தை சரமாரிமாக தாக்கினர். படுகாயம் அடைந்த ஆசிரியரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் அழகியமண்டபம் பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த முகமது கான் (வயது 35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பலில் உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.