செய்திகள்

பெங்களூரில், போதையில் கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவர்கள் தற்கொலை முயற்சி

Published On 2018-10-24 05:13 GMT   |   Update On 2018-10-24 05:13 GMT
பெங்களூரில் மதுபோதையில் கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:

பெங்களூரு யஷ்வந்த்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சையத் சோயப் (18) மற்றும் அவரது நண்பர் ஹரீஷ்(18).

இவர்கள் இருவரும், பெங்களூரு ஜலஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர்கள் இருவரும், மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்றதாக தெரிகிறது. அவர்கள் மது அருந்தியிருப்பதை உறுதி செய்து, சக மாணவர்கள் இது குறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த தகவல், கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக, மதுபோதையில் இருந்த 2 மாணவர்களையும் வரவழைத்து. அனைவரது முன்னிலையில், புத்திமதி கூறி கடும் எச்சரிக்கை விடுத்தார். பின்னர், முதல்வர் அறையை விட்டு வெளியே வந்த அவர்கள் இருவரையும், சக மாணவர்கள் திட்டி, புத்திமதி கூறினார்கள்.

இச்சம்பவங்களால், அவமானமும், வேதனையும் அடைந்த சோயப் மற்றும் ஹரீஷ் அன்று மாலை திடீரென கல்லூரியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர், அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர்.

இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து ஜலஹள்ளி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News