செய்திகள்

வாணியம்பாடியில் 3 குழந்தைகளுடன் தொழிலாளி தற்கொலை முயற்சி

Published On 2018-10-22 13:16 GMT   |   Update On 2018-10-22 13:16 GMT
குடும்ப தகராறு காரணமாக 3 குழந்தைகளுடன் தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரது மகன் கோகுல் (5), மகள்கள் அஸ்வினி (4), மோனிஷா (1½). நேற்று சக்திவேல் தனது குழந்தைகள் 3 பேரையும் அழைத்து கொண்டு வாணியம்பாடி பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, 3 குழந்தைகளின் மீது ஊற்றிவிட்டு, அவரும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, தடுத்து நிறுத்தினர்.

பின்னர் உறவினர்களுக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உறவினர்கள் சக்திவேலையும், அவரது குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News