பண்ருட்டி அருகே மினி லாரி மோதி முதியவர் பலி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பூங்குணம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 70). இவர் இன்று காலை பூங்குணம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அங்குள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டுக்கு கனகராஜ் சென்றார்.
அப்போது அந்த வழியாக பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கனகராஜ் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.