செய்திகள்

புதுக்கோட்டையில் பன்றி காய்ச்சலால் தாய், மகள் பாதிப்பு- அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-10-20 11:36 GMT   |   Update On 2018-10-20 11:36 GMT
பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி மாணவி தனது தாயுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #swineflu
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 48). இவருக்கு கடந்த 13-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை.

தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் நூர்ஜகானுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்தது. அதில் நூர்ஜகானுக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள், நூர்ஜகான் வீட்டிற்கு சென்று, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுரைகள் கூறினர். இதையடுத்து அவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அவருக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாத்திமா திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

நூர்ஜகானுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், நூர்ஜகானை சோதனை செய்த மதுரை தனியார் மருத்துவமனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆனால் நாங்கள் நூர்ஜகானுக்கு அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான், அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்பதை கூறமுடியும்.

இதேபோல நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் அனைத்து சோதனைகளையும் எடுத்த பிறகுதான் என்ன காய்ச்சல் உள்ளது எனக்கூற முடியும். சோதனையில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் இருவரையும் தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தாய்-மகள் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #swineflu
Tags:    

Similar News