செய்திகள்
சூலூர் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி
சூலூர் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவரது மகன் விஸ்வகுமார் (வயது 15). அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி தொடர் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். விஸ்வகுமார் ஓரத்தில் நின்று குளித்து கொண்டிருக்கும் போது கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீரில் மூழ்கிய விஸ்வகுமாரை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.