செய்திகள்

மயிலாடுதுறை கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி- வாலிபர், உறவுப்பெண் கைது

Published On 2018-10-19 12:55 GMT   |   Update On 2018-10-19 12:55 GMT
திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்ததால் மயிலாடுதுறை கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் - உறவுப்பெண்ணை போலீசா கைது செய்தனர்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திரு விழந்தூர் மொட்டவெளி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் இளம்பெண் தேவி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.

இந்த நிலையில் தேவியிடம் மணலூர் தெற்கு வீதியை சேர்ந்த வாலிபர் அருள்தாஸ் (வயது 28) என்பவர் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருள்தாசுக்கு ஆதரவாக அவரது அண்ணி ஜமுனா (35), மற்றும் உறவுப்பெண் சங்கீதா (33) ஆகியோரும் தேவியிடம் அருள்தாசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் மனமுடைந்த தேவி, கடந்த 16-ந் தேதி வீட்டில் வைத்து தூக்குப்போட்டார். அப்போது இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து தேவியை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாபுராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக அருள்தாஸ், உறவுப்பெண் சங்கீதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜமுனாவை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News