செய்திகள்

போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.35 ஆயிரம் மோசடி- கணவர் கைது, மனைவிக்கு வலைவீச்சு

Published On 2018-10-17 10:09 GMT   |   Update On 2018-10-17 10:09 GMT
போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.35 ஆயிரம் மோசடி செய்த கணவன் கைது செய்யப்பட்டார். மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

பாகூர் இருளன்சந்தை பள்ளிவாடி தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 33). இவர் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் ஆன்லைனில் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஒருவரிடம் லைஃப் இன்சூரன்ஸ் போடுவதற்கு பேசினார். அவர்கள் போனில் தொடர்பு கொண்டு ஆதார் கார்டு, மற்றும் பல ஆவணங்களை வாங்கிக்கொண்டு ரூ.35 ஆயிரம் பணம் ஆன்லைனில் மாற்ற சொன்னார்.

அதன் பேரில் இளையராஜா ரூ.35 ஆயிரம் பணம் செலுத்தினார். அவர்கள் இன்சூரன்ஸ் போட்டு அதை இளையராஜாவுக்கு அனுப்பினர்.

அதில் உள்ள நம்பரை இளையராஜா ஆய்வு செய்த போது அந்த நிறுவன பெயர் எதுவும் வரவில்லை. அந்த நிறுவனம் போலி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளையராஜா இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்ற கோபாலகிருஷ்ணன் (29), அவரது மனைவி ரேவதி என்பது தெரிய வந்தது.

இருவரும் வேறு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி இளையராஜாவிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தார். ரேவதியை தேடி வருகிறார்.
Tags:    

Similar News