செய்திகள்

பள்ளிகொண்டா அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் பலி

Published On 2018-10-13 17:31 GMT   |   Update On 2018-10-13 17:31 GMT
பள்ளிகொண்டா அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (வயது 31). இவர்களுடைய மகன் நிதிஷ் (6). திப்பசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நிதிசுக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு டாக்டரிடம் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை என்று தெரிகிறது.

இதனையடுத்து சிறுவன் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நிதிஷ் பரிதாபமாக உயிரிழந்தான். மகன் இறந்தது கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜீவிதா மருத்துவ மனையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News