செய்திகள்

துபாய், இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2018-10-09 21:56 GMT   |   Update On 2018-10-09 21:56 GMT
துபாய், இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChenniAirport
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த கடலூரை சேர்ந்த பயணி ராஜேஷ் (வயது 34) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் தங்கத்தில் செய்யப்பட்ட 3 சாவிகள் இருந்தன. மேலும் அவர் அணிந்து இருந்த பெல்ட் கொக்கியும் (பக்கிள்) தங்கத்தால் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 190 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதேபோல் இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சுகுமார் (35) என்பவர் தனது கைப்பைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து 2 பேரிடமும் யாருக்காக தங்கத்தை கடத்தி வருகிறீர்கள்? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News