செய்திகள்

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2018-10-05 16:37 GMT   |   Update On 2018-10-05 16:37 GMT
கவுந்தப்பாடி அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் ரோட்டில் நாற்றுகள் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆயிகவுண்டனூர் பாலியபாறை பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 7.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லாம்பட்டி கசிவு நீர் (கீழ் பவானி) வாய்க்கால் மூலம் மாணிக்க வலசு, ஆயிகவுண்டனூர், சிங்க நல்லூர், பெரிய கவுண்டன் வலசு, அணைப்புதூர், வெங்கமேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6,7,8 மதகுகள் வழியாக 450 ஏககர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என கூறி அதை கண்டித்து விவசாயிகளும், பெண்களும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் ரோட்டில் நாற்றுகள் மண்வெட்டிகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளை சமரசப்படுத்தினர். பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் கூறியதை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News