குட்கா ஊழல்: மேலும் 2 அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
சென்னை:
குட்கா ஊழல் வழக்கில் செங்குன்றம் குடோன் அதிபர் மாதவராவ் அவரது பங்குதாரர்கள் உமாசங்கர், குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வருகிற 17-ந்தேதி வரை 6 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக மேலும் 2 அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மத்திய சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரி துறையை சேர்ந்த கூடுதல் கமிஷனர் செந்தில் வளவன், மத்திய கலால் வரி துறையில் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்ரீ தரன் ஆகிய 2 பேரின் வீடுகளிளும் சோதனை நடந்தது.
குட்கா ஊழலில் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
குட்கா ஊழல் வழக்கில் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் மட்டுமே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. #gutkhaissue #cbi