செய்திகள்
மேலூரில் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து - 7 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மேலூரில் ஒர்க்ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
மேலூர்:
மேலூர் மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அங்குள்ள அரசு போக்குவரத்து பணிமனை எதிரே மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இரவு 11.30 மணியளவில் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளிவந்தது. இதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் உள்ளே இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மேலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.