செய்திகள்

திண்டுக்கல் கலெக்டர் ஆபிசில் தீக்குளிக்க முயன்ற பெண்

Published On 2018-10-01 14:55 GMT   |   Update On 2018-10-01 14:55 GMT
தனிநபர் கழிப்பிடம் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் ஆபிசில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு பெண் திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்ததும் அங் கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், எனது பெயர் திண்டுக்கல் அடுத்துள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த பூசாரி மனைவி பஞ்சு ஆகும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக பணியாற்றி வந்தேன்.

பாரத பிரதமரின் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காக ரெட்டியப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டையில் ஒப்பந்த காரராக பணியாற்றினேன். ரெட்டியப்பட்டி ஊராட்சி செயலாளர் மணி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி இதற்கான ஆணையை வழங்கினார். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எனக்கு வழங்கிய காண்டிராக்டை ரத்து செய்து விட்டனர். இதனை நம்பி ரூ.3.5 லட்சம் மதிப்பில் செங்கல், மணல் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கி வைத்துள்ளேன்.

வேறு நபர் கழிப்பறை கட்டுவதில் ஊழல் நடப்பதையும் அறிந்தேன். இதுகுறித்து அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவே தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனையடுத்து அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News