செய்திகள்

வடசேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் மரணம்

Published On 2018-10-01 14:32 GMT   |   Update On 2018-10-01 14:32 GMT
வடசேரியில் 8 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியது. அவர்கள் சுப்பிரமணியனை அரிவாளாலும் வெட்டினர். இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனின் சகோதரரை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் ஏற்பட்ட விரோதத்தில் சுப்பிரமணியனை, ரமேசும், அவரது உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனை தாக்கியதாக ரமேஷ்(19), வேல்முருகன் (58), அவரது 14 வயது மகன், சதீஷ் (19), ராஜா (19), முகமது தமீம் அன்சாரி (19) உள்பட மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் ரமேஷ், வேல்முருகன், அவரது 14 வயது மகன் மற்றும் முகமது தமீம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் இன்று அதிகாலை 6.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து வடசேரி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News