செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி அதிமுக பிரமுகர் உயிரிழப்பு

Published On 2018-10-01 10:14 GMT   |   Update On 2018-10-01 10:14 GMT
உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி அதிமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள ராமபால்புரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 48). அ.தி.மு.க. பிரமுகர்.

இவர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 50 பேர் நேற்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு பஸ்சில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சேகர் உள்பட கட்சியினர் அதே பஸ்சில் சென்னையில் இருந்து ராமபால்புரம் நோக்கி புறப்பட்டனர்.

அந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேக்உசைன்பேட்டை பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். அப்போது சேகர் அந்த பகுதியில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த வேன் திடீரென சேகர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சேகர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விபத்து குறித்து எடைக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News