தொழில் அதிபரை கொல்ல முயற்சி: தஞ்சை டாக்டர்- மனைவியிடம் போலீசார் ரகசிய விசாரணை
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்த நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 65). தொழில் அதிபரான இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி அருகில் அபி அண்ட் அபி மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். மேலும் கல்லூரிகளையும் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்த தொழில் அதிபர் இளங்கோவனை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இளங்கோவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோரிகுளம் முருகன், கீழையூரை சேர்ந்த கவுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை திலகர் திடல் பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுப்பது தொடர்பாக, இளங்கோவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில் அந்த மருத்துவமனை டாக்டர்கள் பாரதி மோகன், ஆனந்தசேகர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டாக்டர் பாரதிமோகன் மற்றும் அவரது மனைவி அனுசுயா, மகள் ஜெசிதா மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர் கலைச்செல்வி ஆகியோரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், தலைமையிலான போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதில் தொழில் அதிபர் இளங்கோவனை கொலை செய்ய முயற்சி நடந்தது ஏன்? என்பது பற்றி டாக்டர் பாரதிமோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வாக்கு மூலத்தை போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.