செய்திகள்

பாலவாக்கத்தில் சொத்து தகராறில் தாயை குத்திக் கொன்ற மகன்

Published On 2018-09-25 08:31 GMT   |   Update On 2018-09-25 08:31 GMT
பாலவாக்கத்தில் சொத்து தகராறில் தாயை குத்திக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Murder

திருவான்மியூர்:

நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் மணியம்மை தெருவை சேர்ந்தவர் ராணி அம்மாள் (64). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில், ராணி அம்மாள் தனக்கு சொந்தமான வீடு, நிலம் ஆகியவற்றை ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் கொடுக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதையடுத்து ராணி அம்மாளின் 3-வது மகன் பர்ணபாஸ் தாயின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்டோ ஓட்டிவரும் இவர், தாயிடம் உள்ள வீடு, நிலம் ஆகியவற்றை எல்லா குழந்தைகளுக்கும் சமமாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

ஆனால், ராணி அம்மாள் அதை ஏற்கவில்லை. தன்னை ஆதரித்து காப்பாற்றும் குழந்தைகளுக்குத்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தாய்க்கும்- மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று இரவு பர்ணபாஸ் ஆட்டோவில் வீடு திரும்பினார். அப்போது ராணி அம்மாள் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை பர்ணபாஸ் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த நகை, கம்மல் ஆகியவற்றை எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தார். அவை ரத்தக்கறையுடன் இருந்ததால் பர்ணபாஸ் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே, சொத்து கொடுக்காத ஆத்திரத்தில் தனது தாயை பர்ணபாஸ் கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பாலவாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து, தப்பி ஓடமுயன்ற பர்ணபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலைக்கு வேறு யாரும் தூண்டுதலாக இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News