செய்திகள்

திருவட்டார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2018-09-24 11:02 GMT   |   Update On 2018-09-24 11:02 GMT
திருவட்டார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 2½ பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

குலசேகரம் பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 54). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திருவட்டார் இட்டகவேலி வந்தார். பின்னர் அங்கிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் வசந்த குமாரி அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட வசந்தகுமாரி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் கூச்சலிட்டு அலறினார்.

ஆனாலும் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரது கையை தட்டிவிட்டு கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்துக் கொண்டு பின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News