செய்திகள்

காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

Published On 2018-09-20 17:11 GMT   |   Update On 2018-09-20 17:11 GMT
குடிநீர் வினியோகத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
சிவகாசி:

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குகுப்பணாபுரம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் வினியோகம் சரியான முறையில் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று காலை அந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

அங்கு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிர மணியம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உடனே அந்த பகுதியில் ஆழ்துளைகிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் திடீர் முற்றுகையால் சிவகாசி யூனியன் அலுவலகம் காலை 10¾ மணி முதல் 11¾ மணி வரை பரபரப்பாக காணப்பட்டது. 
Tags:    

Similar News