செய்திகள்

போடியில் ஏலக்காய் விலை கிடு கிடு உயர்வு

Published On 2018-09-20 12:17 GMT   |   Update On 2018-09-20 12:17 GMT
போடியில் ஏலக்காய் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போடி:

போடி முந்தல்சாலையில் இந்திய நறுமண பொருட்கள் வாரியம் சார்பில் ஏலக்காய் ஏல மையம் உள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த ஏலக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். போடி, கம்பம், பட்டிவீரன்பட்டி, விருதுநகர், மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் இவற்றை கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஏலக்காய் ஆக்‌ஷன் கம்பெனி நடத்திய ஏலத்தில் 82,314 கிலோ ஏலக்காய் விற்பனையானது. ஒருகிலோ ரூ.2253க்கு உச்சபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. சராசரி விலையை விட ரூ.1230 கூடுதலாக விற்பனை யானதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரே நாளில் ரூ.603 வரை விலை உயர்வு ஏற்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கேரளாவில் புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் ஏலக்காயை பதிவு செய்வதில் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ஏலக்காய் வியாபாரிகள் ஆக்‌ஷன் சென்டரில் எடுத்த ஏலக்காயை மீண்டும் ஏலம் எடுத்து பதிவு செய்வதால் கூடுதல் விலை ஆகிறது. ஏலக்காய் ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்காத நேரத்தில் இந்த விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் அதிகவிலையில் தொழில்செய்ய அச்சமாக உள்ளது. திடீரென விலை குறைந்தால் கடும் நஷ்டம் ஏற்படும். இதனால் சில வியாபாரிகள், பங்குதாரர்கள் மொத்தமாக வாங்கி திடீரென விலையை உயர்த்தி விடுகின்றனர். இதனால் சிறுவியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே ஏலம் விடப்பட்ட ஏலக்காய்களை மீண்டும் பதிவு செய்ய மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News