செய்திகள்

பள்ளி மாணவன் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

Published On 2018-09-20 10:27 GMT   |   Update On 2018-09-20 10:27 GMT
கச்சிராயப்பாளையம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்:

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவியரசு. இவரது மகன் ரவீந்திரன் (வயது 13). இவன் அதே பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தான்.

நேற்று காலை ரவீந்திரன் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிசென்றான். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவீந்திரன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.

அப்போது வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மாணவன் ரவீந்திரன் மயங்கி கிடந்தான். இதை பார்த்த அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரவீந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவீந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் ரவீந்திரனின்தாய் பாப்பாத்தி புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மாணவனை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News