செய்திகள்

தொப்பூர் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

Published On 2018-09-17 17:23 GMT   |   Update On 2018-09-17 17:23 GMT
தொப்பூர் அருகே இன்று அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் ஓசூருக்கு அரசு பஸ் ஒன்று 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

இந்த பஸ்சை கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லியப் பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார்.

பஸ் தொப்பூர் அருகே கட்டமேடு என்ற பகுதிக்கு 5.30 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சின் பின்புறம் ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். திடீரென்று அவர் கல்லை எடுத்து பஸ்சின் பின்புறமாக வீசினார். இதில பஸ்சின் பின்புறம் உள்ள கண்ணாடி முழுவதும் உடைந்து சுக்குநூறானது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

உடனே பஸ்சை டிரைவர் அண்ணாதுரை தொப்பூர் டோல்கேட் வரை ஓட்டி சென்றுவிட்டு அங்கு பயணிகளை இறங்கி மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டனர். அதன்பின்னர் பஸ்சை தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். புகார் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News