செய்திகள்

விபத்தில் என்ஜினியர் பலி- பொதுமக்கள் மறியல்

Published On 2018-09-17 17:02 GMT   |   Update On 2018-09-17 17:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினியர் பலியானது குறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த ஆலரஅள்ளியை சேர்ந்தவர் குமரேசன் (வயது22). என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அஜித் (21), வினோத் (20).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு காலை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு மோட்டார் சைக்கி ளில் சென்றனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் திரும்பி மோட்டார் சைக்கிளில் மத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மத்தூரை அடுத்த சிவம்பட்டி ஏரிக்கரையோரம் சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் குமரேசன் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அஜித், வினோத் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மோட்டார்சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு சென்றனர். அவர்கள் பள்ளி நுழைவுவாயில் கதவை உடைத்தனர். மேலும் பள்ளியில் உள்ள கண்ணாடிகளை அடித்து உடைத்து டிப்பர் லாரியை வெளியே கொண்டு வர சொன்னார்கள்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிவம்பட்டியில் இருந்து மாற்று வழியில் திருப்பத்தூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ஜனார்த்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான குமரேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவனை பிரேத பரிசோதனைக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News