செய்திகள்

விருதுநகரில் ஜாமீனில் வந்த தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை

Published On 2018-09-17 11:04 GMT   |   Update On 2018-09-17 11:04 GMT
விருதுநகரில் பழிக்குப்பழியாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாத்து நாயக்கன்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேசுவரன் (வயது 47), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்கள் அங்கு வேகமாக வந்தன.

அதில் வந்த 4 பேர், சங்கரேசுவரனை சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார்.

இருப்பினும் அந்த கும்பல் சங்கரேசுவரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கரேசுவரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த கொலை சம்பவம் விருதுநகர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. சங்கரேசுவரனின் சகோதரர் சுடலைமாடசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப்பழியாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

விருதுநகர் அல்லம் பட்டியைச் சேர்ந்த முத்து காமாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சங்கரேசுவரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் தான் முத்துகாமாட்சியின் சகோதரர்கள் பழிக்குப்பழியாக அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக முத்து காமாட்சியின் சகோதரர்கள், ஐ.சி.ஏ. காலனியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், சேர்மராஜ், அல்லம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் குமார், மாத்துநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கீர்த்தி சுவரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News