செய்திகள்
சத்துவாச்சாரி கோவில் விழாவில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சத்துவாச்சாரி அம்மன் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி எம்.ஜி.ஆர். நகரில் தண்டு மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் திரவுபதி அம்மன் சமேத தருமராஜா கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, இன்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் ஒரே வரிசையில் அன்னதானம் வாங்குவதற்காக நின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்மநபர் பறித்துக் கொண்டு நைசாக தப்பி ஓடி விட்டான்.
நகையை பறிகொடுத்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்தவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நகை பறித்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.