செய்திகள்

கடலூரில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா - அ.தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிப்பு

Published On 2018-09-14 07:06 GMT   |   Update On 2018-09-14 07:06 GMT
கடலூரில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவை அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள்ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

கடலூர்:

சுதந்திர போராட்ட வீரரும், சமூகநீதிக்காக பாடுபட்டவருமான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் ரூ.2.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

அதே நேரத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், கடலூர் மாவட்ட அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் எம்.எல்.ஏ.(காட்டுமன்னார் கோவில்) , பாண்டியன் எம்.எல்.ஏ.(சிதம்பரம்) மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அமைச்சர் எம்.சி.சம்பத் தங்களை மதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

 


இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் மைதானத்தில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டதால் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசமி ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

Tags:    

Similar News