தியாகதுருகம் அருகே பாஜக நிர்வாகி மீது தாக்குதல்- வாலிபர் கைது
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 29), பா.ஜ.க. நிர்வாகி. அதே பகுதியில் தேர் திருவிழா நடைபெறுவதையொட்டி ஏழுமலை பேனர் வைத்திருந்தார். இந்த பேனரை யாரோ மர்மநபர்கள் கிழித்து விட்டனர். இதனால் ஏழுமலை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பாலசந்திரன்(28), வடிவேல், தென்கீரனூரை சேர்ந்த கணேசன் ஆகியோர் ஏழுமலையை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த தியாகதுருகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக பாலசந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வடிவேல், கணேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.