செய்திகள்

காரைக்கால் அருகே விபத்து - பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்ததில் ஒருவர் பலி

Published On 2018-09-07 11:22 GMT   |   Update On 2018-09-07 11:22 GMT
காரைக்கால் அருகே வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறு தென்னாங்குடி பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜின் மகள்கள் அருள் மீனா (வயது 23), அருள்மனிஷா (18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கவிராஜன் (26) உள்பட 8 பேர் நேற்று இரவு 10 மணி அளவில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

திருப்பட்டினம் பைபாஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் திடீரென புகுந்தது. இதில் அருள் மீனா, அருள்மணிஷா, கவிராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அருள்மீனா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அருள் மணிஷா, கவிராஜன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து திருப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News