செய்திகள்

மாணவர்கள் வன்முறைகளை தவிர்க்க வேண்டும் - சென்னை பல்கலை. விழாவில் முதல்வர் அறிவுரை

Published On 2018-09-07 14:14 IST   |   Update On 2018-09-07 14:14:00 IST
வன்முறைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் சென்னை பல்கலைக்கழக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #EdappadiPalaniswami #MadrasUniversity
சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தின் 160ம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் தான் என்றும்,  6 குடியரசுத் தலைவர்களையும், பல முதல்வர்களையும், நோபல் பரிசாளர்களையும் சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், புத்தகங்களை தூக்க வேண்டிய கைகளில் மாணவர்கள் ஆயுதங்களை தூக்கி செல்வது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார். வன்முறைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கேட்டுக்கொண்ட அவர், மாணவர்கள் இதைத்தான் படிக்க வேண்டும் என பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் எம்ஜிஆர் சமூக வளர்ச்சி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும், புராதன கட்டிடங்களை புதுப்பித்து பாதுகாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.



முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘மனது சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்து நமக்கு முன்னால் இருப்பவர்களை கடந்து சென்றால் வரலாறு படைக்க முடியும்’ என்றார். #EdappadiPalaniswami #MadrasUniversity
Tags:    

Similar News