செய்திகள்

ராஜபாளையம் அருகே மகன் திருமணத்தன்று பெண் தற்கொலை

Published On 2018-09-07 06:46 GMT   |   Update On 2018-09-07 06:46 GMT
ராஜபாளையம் அருகே மகன் திருமணத்தன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள வாகைக்குளம் பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி பார்வதி (வயது 55). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

இதில் திருமணமான ஒரு மகள் இறந்து விட்டதால் அவரது கைக்குழந்தையை பார்வதி வளர்த்து வந்தார். இந்த நிலையில் முதல் மகனுக்கு திருமணமாகாத நிலையில், இளைய மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கு பார்வதி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனாலும் அதையும் மீறி நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் 2-வது மகனுக்கு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்காத பார்வதி இருக்கன்குடிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று வாகைக்குளம்பட்டி அருகில் உள்ள கல்குவாரியில் தேங்கிய தண்ணீரில் பார்வதி பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டனர்.

பார்வதி தற்கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. மகனின் திருமணத்தன்றே தாய் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News