செய்திகள்

அய்யலூர் அருகே இரவு நேரங்களில் களைகட்டும் சூதாட்டம்

Published On 2018-09-06 14:58 GMT   |   Update On 2018-09-06 14:58 GMT
அய்யலூர் அருகே இரவு நேரங்களில் களைகட்டும் சூதாட்டம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தோட்டங்களிலும் தோப்பு வீடுகளிலும் இரவு நேர சூதாட்டம் களைகட்டி வருகிறது. கிராம புறங்களில் திரைப்படங்களை காண்பித்து பொதுமக்கள் அங்கு சென்றவுடன் இது போன்ற சூதாட்டம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஏராளமான விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வியாபாரிகள் இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பணத்தை இழக்கும் நபர்கள் மீண்டும் தங்கள் ஆட்டத்தை தொடர்வதற்காக அதே இடத்தில் பணம் கடனாக வழங்கப்படுகிறது.

வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தை பெற்று விளையாட்டை தொடர்கின்றனர். இதனால் பணத்தை இழப்பதுடன் வீடு மற்றும் உடைமைகளையும் பறிகொடுத்து ஊரை விட்டு ஓடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது போன்ற சூதாட்டத்துக்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே சமூக சீரழிவுக்கு காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News