செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை- பண்ருட்டியில் கணவர் உள்பட 3 பேர் கைது

Published On 2018-09-06 10:51 GMT   |   Update On 2018-09-06 10:51 GMT
பண்ருட்டியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி வி.எஸ்.பி. நகரில் வசித்து வருபவர் பழனி (வயது 50) பெயிண்டர். இவரது மகன் வினோத் (25) என்பவருக்கும், கல்குணம் கிராமத்தை சேர்ந்த சூர்யா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணத்துக்கு வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை வாங்கி கொடுத்துள்ளனர்.

மேலும் வரதட்சனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சூர்யாவை கொடுமைப்படுத்தி தாக்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.

இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் சூர்யா புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வீட்டுக்கு போய் நகை வாங்கி வா என கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் சூர்யாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சூர்யா துப்பட்டாவால் கடந்த 14-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி. சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடலூர் சப்-கலெக்டர் சரயுவும் விசாரணை நடத்தினார்.

இதனை தொடர்ந்து சூர்யாவின் கணவர் வினோத், மாமனார் பழனி (50), மாமியார் ராஜேஸ்வரி (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

அவர்கள் அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கணேஷ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News