குத்தாலம் அருகே கடையில் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த வாலிபர் கைது
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மந்தகரை மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 50). இவர் அதே பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு அவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கடைக்கு லாரியில் பொருட்கள் வந்ததால் அவைகளை வாங்கி வைக்க சென்றார். அவர் கடையை திறந்து உள்ளே சென்ற போது மாடி பகுதியில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை ஜாகீர் உசேன் தொழிலாளர்களுடன் சென்று மடக்கி பிடித்து குத்தாலம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் ராஜகோபாலபுரம், ராஜா காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செல்வ ரத்தினம் (23) என்று தெரிய வந்தது. அவர் கடையில் கொள்ளையடிக்க பூட்டை உடைத்து மாடியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மதி வாலிபர் செல்வரத்தினத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.