செய்திகள்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக இந்து சமய மாநாடு - வானதி சீனிவாசன் பங்கேற்பு

Published On 2018-09-05 13:11 IST   |   Update On 2018-09-05 13:11:00 IST
விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய 125-வது ஆண்டையொட்டி அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடக்கும் உலக இந்து சமய மாநாட்டில் பா.ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்கிறார்.
சென்னை:

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1892-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி இந்து சமயம் பற்றி ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. அந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி உலக இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் வருகிற 7-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.

அகில உலக இந்து அமைப்புகள், உலக அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உள்பட 3 அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்து சமயத்தை பின்பற்றி உலகம் முழுவதும் பணியாற்றும் பல்துறை வல்லுனர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஷ்வரன் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து பா.ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதில் 2-ம் நாள் மாநாட்டில் இந்து சமயத்தில் எழுச்சிமிகு பெண்கள் என்ற தலைப்பில் வானதி சீனிவாசன் உரை நிகழ்த்துகிறார். இதற்காக அவர் இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

இதுபற்றி அவர் கூறும் போது, ஒரு இந்துப் பெண்ணாக வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நின்று இந்து சமய பெண்களை பற்றி உரை நிகழ்த்த கிடைத்த வாய்ப்பு மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.
Tags:    

Similar News