செய்திகள்

விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2018-09-04 16:59 GMT   |   Update On 2018-09-04 16:59 GMT
விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் கடலூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கடலூர்:

கடலூர் முதுநகர் சுண்ணாம்புகாரதெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் ராஜா(வயது 22) வெல்டர். சம்பவத்தன்று இவர் கடலூர் முதுநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்தார். சுத்துக்குளம் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் கடலூரில் இருந்து விருத்தாசலம் மார்க்கமாக சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

விபத்தில் பலியான ராஜா குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கக்கோரி அவரது தந்தை வேலாயுதம் வக்கீல்கள் சிவமணி, சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 25.2.2014 அன்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் விபத்தில் பலியான ராஜா குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மாவட்ட நீதிபதி தீர்ப்பு கூறினார்.

ஆனால் குறித்த காலத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்காததால் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை வேலாயுதம் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் இழப்பீட்டு தொகையை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று கடலூர் பஸ்நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். 
Tags:    

Similar News