சீர்காழி அருகே பிரபல கொள்ளையன் கைது
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் அவரது பெயர் சுந்தர் என்கிற பாலசுந்தர் (வயது 23) என்றும் சீர்காழி பெருந்தோட்டம் மெய்யான் தெருவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இவர் மீது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கொள்ளிடம், பொறையாறு ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான பாலசுந்தரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 23 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.